சிவ தரிசனம் ஈச நேசன் மகஸ்ரீ.8438437000
நானும் எனது துணைவியும் வழக்கம்போல சிவ தரிசனம் காண
21.12.2015 அன்று காலை ஒரு மகிழுந்து ஏற்பாடு செய்துக்கொண்டு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டோம். ஏற்கனவே கண்டுவிட்ட ஆலயம் விடுத்து மற்ற ஆலயங்கள் யாவும் காணவேண்டும் எனும் எண்ணம் கொண்டு ஒரத்த நாடு நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.
தஞ்சைச் சிவனடியார் திரு கண்ணன் அவர்கள் எவ்வாறு பயணம் துவங்கிச் சென்றால் தடங்கலின்றி தொடர்ந்து தரிசநம் பெறலாம் என்பதான வழிகளை தெரிவித்தபடி முதலில் ஈச்சங்கோட்டை என்னும் ஈசன் கோட்டை நோக்கி பயணம் துவங்கியது.
கல்லனையிலிருந்து துவங்கி வடக்கிலிருந்து தெற்கே பாயும் தன்மையதாய் வழிந்தோடும் ஆற்றின் கரைப் பகுதியில் வேயப்பட்டிருந்த சாலை வழியே செல்லும்போது இரு புறமும் இயற்கை எழில் கொஞ்ச கண்ணுக்கு விருந்தளித்தது..
அச்சாலை தஞ்சையிலிருந்து வெட்டிக்காடு என்னும் கிராமம் செல்வதாக வழிகாட்டி உணர்த்தியது. வலப்புறம் வெள்ளமென பெருக்கெடுத்தோடும் ஆற்றுக் காட்சி இடப்புறம் எங்கு காணினும் வயல்வெளி. அதில் பச்சைப்பசேலென பருமவ மெய்திய நெல் விளைச்சல். முப்போகமும் விளைந்து முழுதுமாய் உயிர் காக்கும் பூலோக வளம் தொடரட்டும் என இறைவனை வேண்டிக்கொண்டோம். ஊடுபயிராக உளுந்தும், பயிறும், ஒவ்வோரிடத்திலே கரும்பும் விளைகிறது.
வயலிலே கல் நட்டு வீடு கட்ட வழியிட்டு புல்விளையும் பூமியாய் மாறிவிட்ட சென்னைச் சுற்றுப்புறத்தைக் கண்டு வெதும்பும் அனைவரும் இவ்வழியேகி பசிக்கு உணவிடும் தஞ்சை மண்ணை அவசியம் காணுதல் வேண்டும்..
ஆற்றின்போக்கில் குறுக்கிடும் காட்டாற்று வெள்ளம் கலந்து கேடுகாணா வகையில் அதற்கென தனிப்பாதை வகுத்து அன்னாளில் செய்திருப்பது கண்டு பூரித்தோம். ஆற்று நீர் கீழ் நோக்கி சென்று மறுபுறம் தன்வழியேகவும், குறுக்கிடும் காட்டாற்று நீர் பாதிப்பின்றி மறுபுறம் சென்றுவிடவும் செய்திருப்பது மகிழ்வான செய்கை. இத்தன்மையை சென்னையிலும் நீர்த்தடம் மற்றும் வழித்தடம் பாதிக்காது செய்யும் உத்தியாகக் கொண்டு செய்யலாமே என எண்ணினோம்.
தஞ்சையிலிருந்து 18 கிலோ மீட்டர் சாலை வழியே பயணித்ததும் ஈச்சங்கோட்டை கிராமம் வந்தது. அங்கிருந்த சிலரிடம் சிவாலயம் செல்ல வழி கேட்டோம். அவ்வூரில் சிவாலயம் ஏதுமில்லை என அவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த கிராமத்திற்கான சிவாலயம் பூவளூர் என்னுமிடத்தில் இருப்பதாகவும் அந்த சிவாலயமே 18 பட்டியெனும் கிராமங்களின் மக்கள் வழிபடும் சிவாலயமெனத் தெரிவித்தனர்.
நிச்சயமாய் இவ்வூரில் சிவபெருமான் ஆட்சி செய்துள்ளார் என்றும் ஈசன் கோட்டை அல்லது ஈஸ்வரன் கோட்டை என்பதே மருவி ஈச்சங்கோட்டை
என்று தற்போது வழக்கத்தில் இடம்பெற்று
விட்டதாகவே கருதுவதால்
சிவாலயம் இவ்வூரில் இருத்தல் வேண்டும் என்று நான் கூறியதும், ஊர்பஞ்சாயத்து ஒன்று அருகில் நிகழ்வதைக்காட்டி அங்கு சென்று விசாரித்தால் யாருக்காவது அதுபற்றி தெரியக்கூடும் என்று தெரிவித்தனர்.
கூட்டமாய் இருந்த இடத்திற்குச் சென்று சிவாலய இருப்பிடம் பற்றி கேட்டோம். பலருக்கும் தெரியாது என்றே பதில் கிடைத்தது நிச்சயமாய் சிவாலயம் இங்கு உண்டு அதுவும் ஒரு ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்திருந்த ஆலயத்தில் சுயம்பு வடிவ சிவலிங்கமாய் உள்ளவர் ஜம்புலிங்கேஸ்வரர் என்றதும் சிலர் வாய் திறந்தனர்.
அக்ரஹார நிலம் என வழங்கும் வயல் வெளியில் ஒரு மேடான பகுதி உள்ளதாகவும் அதன் அருகில் ஒரு குளப்பகுதி இருப்பதாகவும் தெரிவித்தனர். எங்களுக்கு அந்த இடத்தை காட்ட யாரேனும் உதவுங்கள் எனக்கேட்டதும் சிலர் உடன்வர இச்சை தெரிவித்தனர். அதில் ஒருவர் கையில் வயல்வேலை செய்வதற்காக மண்வெட்டி வைத்திருந்தார்.
அவரை உழவாரப்பணி செய்யும் அப்பராகவே எண்ணினேன்.
வரப்புகளில் நீர் வெளியேற்றி பயிர்காக்கச் செய்ததால் உடைபட்ட வரப்புகளில் தடுமாறி நடந்து சிவபெருமான் இருப்பதாக உணர்த்திய மேட்டினை மெல்ல அடைந்தோம்.
மரங்கள் சூழ சில்லென்ற சூழ் நிலையில் மேட்டின் நடுவில் சிறு கருங்கல்ஒன்று தென்பட்டது. வந்திருந்தவரில் ஒருவர் நான் இங்கு வந்து எப்போதாவது விளக்கேற்றிச் செல்வேன் என்றார். அதற்கொப்ப அங்கே அகல் விளக்குகளும் காணப்பட்டது. அருகில் அப்பரென நின்றிருந்த அன்பரை இந்த இடத்தில் உள்ள லிங்கவடிவைச் சுற்றி பள்ளமெடுக்க கேட்டேன். அவரும் அவ்வாறே செய்ததும் ஆவுடையார் தென்பட்டது. அப்படி பள்ளம் எடுத்து லிங்க வடிவைக் கண்டதும் அனைவரும் மகிழ்ந்தனர். அருகிருந்த அன்பர்களின் பெயர்களைக் கேட்டேன். பஞ்சாட்சர எழுத்தென உடன் வந்தவர்கள் ஐவராகும்.
அப்பரென நான் குறிப்பிட்டவர் பெயர் சிவானந்தம் என்றார்.
அவரது தம்பிமுறையாகும் நபர் பிருகதீஸ்வரன் என்றார்.
அடுத்த அன்பர்கள் தருமராசன்,கணேசன், விஜயகுமார் என அறிந்ததும் ஆச்சரியப் பட்டோம். எங்களுடன் மகிழுந்து ஓட்டிவந்த தஞ்சை ஓட்டுனர் பெயர் கஜேந்திரன் என்பதாகும். மண்விட்டு வெளிவந்து முகம்காட்டிய ஜம்பு லிங்கேஸ்வரர் தரிசனம் அன்று காலை 10 மணிக்கு கிட்டியது. சில நாளில் இந்த இடத்தை சரி செய்து விளக்கேற்றி வழிபட ஆவன செய்வோம் என உறுதி தந்தனர். உள்ளம் பூரித்தது. அவர்களை என் கைபேசியில் படம்
பிடித்துக்கொண்டேன்.
|
உடன் வருகை தந்த அன்பர்கள் சிவானந்தம்,
தர்மராஜன். கணேசன்
விஜயகுமார் மற்றும் பிருகதீஸ்வரன்,
அ.மி. ஜம்புலிங்க சிவலிங்க மேட்டின் அருகில்
உள்ள குளத்தின் தற்போதய நிலை.
|
இதற்குமேல் சிவாலயம்பற்றியோ அதற்குண்டான வருமானம் நல்கும் நிலங்கள் பற்றியோ எங்கள் விசாரணை ஏதும் இல்லை. அது அரசின் பணி. புதையாறு என்னும் ஆற்றின் அருகில் அமைந்த இவ்விடத்தில் ஆராய்ச்சி செய்தால் மேலும் பல அற்புத தகவல்கள் கிடைக்கக்கூடும்.
சிவ தரிசனம் கண்டதும் அதற்காக பஞ்சாட்சர எண்ணிக்கை வடிவில் கிராமத்தார் உதவியதும் எங்களுக்கு கிட்டிய பாக்கியமாகவே கருதுகிறோம்.
இத்திருத்தலம் ஒரத்த நாட்டின் வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தரிசனம் முடித்து அடுத்த தரிசனத்திற்காக தென்மை நாடு சோளீஸ்வரர் ஆலயம் நோக்கி பயணப்பட்டோம். வயல்சூழ் வழி எங்களுக்கு வழிகாட்டியது.